Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

25 பேர் பலியான கோவா தீ விபத்து; மதுபான ‘கிளப்’ பங்குதாரர் டெல்லியில் கைது; இதுவரை மேலாளர் உட்பட 6 பேர் சிக்கினர்

பனாஜி: கோவாவில் 25 பேரை பலிகொண்ட இரவு விடுதி தீ விபத்து வழக்கில், தலைமறைவாக இருந்த பங்குதாரர் டெல்லியில் பிடிபட்ட நிலையில், முக்கிய உரிமையாளர்கள் தாய்லாந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. கோவா மாநிலம் அர்போரா பகுதியில் உள்ள ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற மதுபான இரவு விடுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு கேளிக்கை நிகழ்ச்சியின்போது, உள்ளரங்கில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் மூங்கில் கூரையில் தீப்பற்றி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே, அந்த விடுதியின் முக்கிய உரிமையாளர்களான சவுரப் லுத்ரா மற்றும் கவுரவ் லுத்ரா ஆகிய சகோதரர்கள் தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகருக்கு விமானம் மூலம் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களைக் கண்டுபிடித்து அழைத்து வர இண்டர்போல் மூலம் ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், போதிய அனுமதியின்றி விதிமீறல்களுடன் செயல்பட்ட அந்த விடுதிக்குச் சொந்தமான பிற சட்டவிரோதக் கட்டிடங்களை இடிக்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த விடுதியின் மற்றொரு பங்குதாரரான அஜய் குப்தா என்பவர் டெல்லியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. ஏற்கனவே அவர் மீது ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி போலீசார் அவரை நேற்று அதிரடியாகப் பிடித்தனர். இதுகுறித்து கோவா போலீசார் கூறுகையில், ‘அஜய் குப்தா முறைப்படி கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கோவா அழைத்து வரப்படுவார்’ என்று தெரிவித்தனர். இவருடன் சேர்த்து இதுவரை மேலாளர்கள் உட்பட 6 பேர் பிடிபட்டுள்ளனர்’ என்றார்.