Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலக விரிவாக்கத்தை முடக்கிய வழக்கை முடிக்கும் முயற்சிக்கு பின்னடைவு: அமெரிக்காவுக்கு செல்ல முடியாத அதானி!

மும்பை: அமெரிக்காவில் தொடர்ந்து வரும் வழக்கால் அதானி குழுமத்தின் உலக விரிவாக்க திட்டம் முடங்கிவிட்டது. மேலும், இந்திய - அமெரிக்க வர்த்தக பிரச்சனை, இந்த விவகாரத்தில் அதானிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சூரிய சக்தி மின்சார ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து, அதானிக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு நடந்து வருகிறது. லஞ்சம் தந்து ஒப்பந்தம் பெற்றதை அதானி குழுமம் முதலீட்டாளர்களிடம் மறைத்தது குற்றம் என்று அதானி மீது வழக்கு உள்ளது.

இந்நிலையில், கெளதம் அதானி மற்றும் நிறுவன அதிகாரிகள் மீதான அமெரிக்க வழக்கை சுமூகமாக தீர்க்க அந்நிறுவனம் முயற்சித்தது. ஆனால், இந்தியா - அமெரிக்கா பிரச்சனையால் வழக்கை சுமூகமாக முடிக்கும் அதானி முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனிடையே அமெரிக்க சட்டத்துறை மட்டுமின்றி பங்கு பரிவர்த்தனை ஆணையமும் அதானி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்தது. அதானி மீதான குற்ற வழக்கு விசாரணையை அமெரிக்க சட்டத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க பங்கு பரிவார்த்தை ஆணையமும் அதானிக்கு எதிரான வழக்கில் நோட்டீஸ் அனுப்ப முயன்று வருகிறது.

இதனிடையில் வழக்கு காரணமாக அதானி அமெரிக்காவுக்கு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. அமெரிக்கா சென்றால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதால், அதானி அந்நாட்டிற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார். டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதும் அமெரிக்காவில் 88,400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அதானி அறிவித்தார். ஆனால் வழக்கு முடிவுக்கு வராததால் அமெரிக்காவில் முதலீடு செய்யும் அதானி திட்டமும் முடங்கியுள்ளது. அமெரிக்க வழக்கால் அதானி டோட்டல் நிறுவனத்தில் கூடுதல் முதலீடு செய்வதை பிரெஞ்சு நிறுவனம் நிறுத்தியுள்ளது. அமெரிக்காவில் முதலீட்டு பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டும் அதானி திட்டமும் முடங்கியுள்ளது. மேலும், கென்யாவில் விமான நிலைய ஒப்பந்தம், மின் உற்பத்தி ஒப்பந்தம் பெறும் அதானி திட்டமும் அமெரிக்க வழக்கால் தடைப்பட்டுள்ளன.