ரயில் நிலையம் - பேருந்து முனையம் இணைப்பு; கிளாம்பாக்கம் நடைமேம்பாலப் பணி விறுவிறு: செங்கல்பட்டு மார்க்கத்தில் பணி நிறைவு
கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே ரயில் நிலையம்-பேருந்து முனையம் இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்கும் பணி செங்கல்பட்டு செல்லும் மார்க்கத்தில் நிறைவடைந்தது. சென்னை, வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரம் கிளம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளும், இதேபோல் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளும் இயங்கி வருகின்றன. இதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ரயில் மூலம் வரும் பயணிகள் வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கத்தில் இறங்கி நடந்தே வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே இறங்கி ஆபத்தான நிலையில் சாலையை கடந்து வருகின்றனர். இதில் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே பல கோடி மதிப்பீட்டில் ரயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே ரயில் நிலையத்தையும், பேருந்து முனையத்தையும் இணைக்கும் விதத்தில் பயணிகள் எளிதில் கடப்பதற்காக நடை மேம்பாலம் அமைக்கும் பணி ராட்சத கிரேன்கள் மூலம் நேற்று முன்தினம் காலை தொடங்கி இரவு முடிவடைந்தது. இதற்காக போக்குவரத்தில் மாற்றம் செய்து தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் வாகனங்களை போக்குவரத்து துறை போலீசார் எதிர் திசையில் திருப்பி அனுப்பினர்.
மேலும் தற்போது வடகிழக்கு பருவமழை விட்டுவிட்டு பெய்து வருவதால் எதிர் திசையில் மலை மேம்பாலம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில் மழை நின்ற பிறகு செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் மார்க்கத்தில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


