தேன்கனிக்கோட்டை: தோழியுடன் தகாத உறவால், 5 மாத ஆண் குழந்தையை கொன்று, நாடகமாடிய தாயை போலீசார் காப்பகத்தில் அடைத்தனர். மேலும், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(30). இவரது மனைவி பாரதி(25). இவர்களுக்கு 5 மாதத்தில் துருவன் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 4ம் தேதி, பாரதி குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
மாலை 5 மணியளவில் குளிப்பாட்டுவதற்காக தூக்கிய போது, குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது. உடனே குழந்தையை கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்து விட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம்(5ம் தேதி) சுரேஷ் மனைவி பாரதியின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அதில், இறந்த குழந்தையின் புகைப்படம், அதேபகுதியை சேர்ந்த சுமித்ரா என்பவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டதை கண்டு திடுக்கிட்டார். இதனால், தனது குழந்தையின் சாவில் சந்தேகம் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அன்றிரவு கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார்.
இதன்பேரில், சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிந்து பாரதி மற்றும் அவரது தோழி சுமித்ராவிடம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. . பாரதிக்கும், அவரது தோழி சுமித்ராவுக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருந்துள்ளது. அதனை அறிந்த குடும்பத்தினர் கண்டித்ததால், தற்காலிகமாக கைவிட்ட நிலையில், மீண்டும் சுமித்ரா மற்றும் பாரதி ஆகியோருக்கிடையே நெருக்கம் அதிகரித்துள்ளது.
அப்போது, ‘முன்பு போல் என்னிடம் சரியாக பேசாதது ஏன்? என்னை விட குழந்தை, கணவன் முக்கியமாக போய் விட்டதா?’ எனக் கேட்டு சுமித்ரா அழுதுள்ளார். இதனால், பாரதி தனது குழந்தையை கொன்று விட்டு நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனிடையே, சுமித்ரா மற்றும் பாரதியை போலீசார் பிடித்து காப்பகத்தில் அடைத்தனர்.
* தோழியுடன் பேசிய நண்பரை தாக்கி மது பாட்டிலை கழுத்தில் வைத்து மிரட்டிய 2 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் சூரியா (29). இவர் தோழியிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்நிலையில் சூரியாவின் நண்பரான பிரபுவும் (28) அந்த பெண்ணிடம் செல்போனில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூரியா, நண்பரை இனிமேல் பேசக்கூடாது என்று எச்சரித்துள்ளார். அதையும் மீறி பிரபு பேசியதால் ஆத்திரமடைந்த சூரியா, மற்றொரு நண்பரான சாமிநாதன் என்கிற சிவா உடன் சேர்ந்து பிரபுவை தாக்க திட்டம் தீட்டியதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பல்லடம் பேருந்து நிலையத்தில் மூவரும் சந்தித்து ஆலுத்துபாளையம் பிரிவு பகுதியில் மது அருந்தி உள்ளனர். அப்போது சூரியாவிற்கும் பிரபுவிற்குமிடையே வாக்குவாதம் ஏற்படவே சூரியா மற்றும் சிவா ஆகியோர் சேர்ந்து பிரபுவை காலால் உதைத்து கடுமையாக தாக்கியதோடு, மது பாட்டிலை உடைத்து கழுத்தில் வைத்து மிரட்டி போனில் அதை வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் நேற்று பல்லடம் போலீசார் சூரியா, சிவா ஆகியோரை கைது செய்தனர்.
