Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வால்பாறை அருகே பெற்றோர் கண்முன் சிறுத்தை கவ்வி சென்ற 7 வயது சிறுமி 18 மணி நேரத்திற்கு பின் சடலமாக மீட்பு: கடித்து குதறி சாப்பிட்டதுபோக மிஞ்சிய பாகங்கள் சேகரிப்பு

வால்பாறை: வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச்சென்ற 7 வயது சிறுமி சடலம், வனத்துறையினரின் 18 மணி நேர தேடுதலுக்கு பிறகு நேற்று மீட்கப்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறை அருகே பச்சை மலை எஸ்டேட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, மனைவி மோனிகா தேவி ஆகியோர் தங்கி தேயிலை தோட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது 7 வயது மகள் ரோஷினி குமானி (7), நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, தேயிலைத்தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை கண் இமைக்கும் நேரத்தில் வந்து சிறுமியை தூக்கிச்சென்றது.

இதை அருகே இருந்த சிறுமியின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டனர். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவயிடம் வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் வனப்பகுதியில் சிறுமியின் உடலை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரவானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை முதல் மோப்ப நாய் உதவியுடன் வனத்தில் சிறுமியின் உடலை தேடும் பணியில் வனத்துறையினர், போலீசார் ஈடுபட்டனர். 18 மணி நேர தேடுதலுக்குப் பிறகு பிற்பகல் பச்சைமலை எஸ்டேட்டிலிருந்து 400 மீட்டர் தொலைவில் வனத்தில் ஒரு மரத்தின் கீழ் சிறுமி உடல் சிதைந்த நிலையில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததை கண்டறிந்தனர்.

சிறுத்தை சாப்பிட்டதுபோக மீதமுள்ள சிறுமியின் தலை, உடல், கால், கை என தனித்தனியாக கிடந்த உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் சேகரித்து பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மகளின் சடலத்தை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியில் கதறி அழுதனர். உடற்கூறாய்வுக்கு பின், சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வால்பாறை வனத்துறை, போலீசார், வருவாய் துறை, நகராட்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, வனத்துறை சார்பில் சிறுமியின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.