Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுமியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்; கூலிப்படையை அனுப்பி பைனான்ஸ் அதிபர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை; தந்தையிடம் விசாரணை

திருப்பூர்: சிறுமியின் ஆபாச புகைப்படத்தை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் பைனான்ஸ் அதிபரை கூலிப்படை ஏவி கொலை செய்த சிறுமியின் தந்தை உட்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்தவர் அன்பு (எ) புவனேஸ்வரன் (25). இவர் திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் திருப்பூரை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்தார். சிறுமியுடன் சேர்ந்து புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து போனில் வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது அருந்தும்போது நண்பரான தமிழரசனிடம் சிறுமியின் புகைப்படம், வீடியோக்களை அன்பு காட்டியுள்ளார். அதில் சில வீடியோ ஆபாசமாக இருந்துள்ளது. அப்போது அந்த புகைப்படம், வீடியோக்களை அன்புவிடமிருந்து பெற்ற தமிழரசன் சிறுமியின் தந்தையான சுந்தர்ராஜனுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவிநாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்வதை விரும்பாததால் தமிழரசன் மற்றும் அவரது நண்பர் செல்லத்துரை உதவியோடு அன்பு என்கிற புவனேஸ்வரனை தீர்த்துக்கட்ட சிறுமியின் தந்தை சுந்தர்ராஜன் திட்டமிட்டார்.

அதன்படி செல்லத்துரை நேற்று முன்தினம் இரவு அன்புவை திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு வரவழைத்தார். அங்கு செல்லத்துரையும், அன்புவும் சேர்ந்த மது அருந்தினர். அப்போது அன்புவிடம் சிறுமியின் புகைப்படம், வீடியோ தொடர்பாக செல்லத்துரை பேசினார். பிரச்னையை சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனவும், சிறுமியின் படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்து விட வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். பின்னர் நள்ளிரவு 1.30 மணியளவில் திருப்பூர், காந்தி நகர் அருகே ஏவிபி லே-அவுட்டில் உள்ள அங்கையர்செல்வன் என்பவரின் வீட்டிற்கு அன்புவை செல்லத்துரை காரில் அழைத்து சென்றார். காரை அன்புவின் தம்பி மகேஷ்வரன் ஓட்டி சென்றுள்ளார். அங்கு காரை விட்டு முதலில் செல்லத்துரை இறங்கினார்.

அதன்பின்பு அன்புவை இறங்கி வருமாறு செல்லத்துரை கூறியதை அடுத்து அன்பு காரிலிருந்து இறங்கி வந்தார். அப்போது அங்கையர்செல்வனின் வீட்டில் பதுங்கி இருந்த 8 பேர் கொண்ட கும்பல் அன்புவை அரிவாளால் வெட்டியது. தப்பி ஓட முயன்றவரை விடாமல் துரத்தி சென்று கழுத்து, முகம், தலை, கை ஆகிய பகுதிகளில் வெட்டி சாய்த்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அண்ணனை கும்பல் தாக்குவதை பார்த்த மகேஷ்வரன் பயத்தில் காரை வேகமாக ஓட்டிச்சென்று அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வருவதற்குள் கும்பல் அங்கிருந்து தப்பியது. இது குறித்து வழக்குப்பதிந்து சிறுமியின் தந்தை சுந்தர்ராஜன் மற்றும் தமிழரசனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 8 பேரை தேடி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் சிக்கினார்

அன்புவை கொலை செய்ய நண்பர் செல்லத்துரையை ஏற்பாடு செய்த தமிழரசன், கொலை நடப்பதற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தான் விபத்தில் சிக்கியதாக கூறி அட்மிட் ஆனார். கொலை நடந்த பின்னர் இந்த தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று தமிழரசனை பிடித்து வந்தனர்.

சிறுமியின் தந்தைக்கு வீடியோ

அனுப்பியது முன்னாள் காதலன்

பைனான்ஸ் அதிபர் அன்புவை கொலை செய்வதற்கு உதவிய தமிழரசன் அந்த 14 வயது சிறுமியை முதலில் காதலித்துள்ளார். அவரும் சிறுமியுடன் வீடியோ எடுத்துள்ளார். இது சிறுமியின் தந்தைக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தந்தை சுந்தர்ராஜன் கண்டித்ததால் தமிழரசன் காதலை கைவிட்டுள்ளார். இந்த நிலையில் அன்புவின் செல்போனில் சிறுமியின் புகைப்படம், வீடியோ இருந்ததை அவருக்கு அனுப்பிய தமிழரசன், ‘‘என்னை கண்டித்தாய். ஆனால் இப்போது இதை பார்’’ என கூறியுள்ளார். இதனால்தான் சிறுமியின் தந்தை ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.