பெர்லின்: ஜெர்மன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை எம்மா நவரோவை, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோஸா வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஜெர்மனின் பெர்லின் நகரில் ஜெர்மன் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை எம்மா நவரோ (24), ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோஸா (27) மோதினர். முதல் செட்டில் இருவரும் கடுமையாக போராடியதால், டை பிரேக்கர் வரை சென்றது.
கடைசியில், அந்த செட்டை, 7-6 (6-3) னெ்ற கணக்கில் படோஸா வசப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நடந்த 2வது செட்டை எந்தவித சிரமமும் இன்றி, படோஸா, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால் 2-0 என்ற கணக்கில் வென்ற அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இத்தாலியை சேர்ந்த 9ம் நிலை வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி (29), துனீசியாவை சேர்ந்த 61ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜேப்யுர் (30) மோதினர். இப்போட்டியில், அபாரமாக ஆடிய ஜேப்யுர், 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்று ஜாஸ்மினுக்கு அதிர்ச்சி அளித்தார்.


