கோவை: கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 4 எம்.எல்.ஏ..க்கள் மீது 2 போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,791 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் கடந்த 9ம் தேதி திறக்கப்பட்டது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த திட்டம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு தொடங்கப்பட்டது என அதை கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ
தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் அ.தி.மு.க.வினர் உப்பிலிபாளையம் ரவுண்டானா அருகில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அப்போது அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக நிகழ்ச்சி நடத்தியதாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராமன், தாமோதரன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஆகியோர் மீதும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 75 பெண்கள் உட்பட 400 பேர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அதேபோல கோல்டுவின்ஸ் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பீளமேடு போலீஸ் நிலையத்திலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராமன், தாமோதரன், பி.ஆர்.ஜி அருண்குமார் உட்பட 405 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.