Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காசாவில் அமைதி.. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு..!!

வாஷிங்டன்: இஸ்ரேலும் ஹமாஸும் போர் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களின் உயிரை பலி கொண்ட போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிரம்ப் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; இஸ்ரேலும், ஹமாஸும் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.

அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின் படி தனது பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். அரபு, முஸ்லிம் நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சிறந்த நாள். இதற்காக, எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பாக்கியவான்கள் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இதையடுத்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது; இதை ஒரு சிறந்த நாள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கும், எங்கள் அன்புக்குரிய பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு கொண்டு வருவதற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.