ஜெருசலேம்: காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-காசா போர் இடையே 2023ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 65,000க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார். போரை நிறுத்தி, குறைந்தபட்சம் சில பணயக் கைதிகளை விடுவிக்கும், அமைதி திட்டத்தின் முதல்கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாசும் ஒப்புக்கொண்டுள்ளன. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதுபற்றி நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பணயக் கைதிகள் விடுவிப்புக்கான ஒப்பந்தத்தின் சுருக்கத்துக்கு இஸ்ரேல் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. திட்டத்தின் மற்ற அம்சங்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை. சில மணி நேரங்கள் கழித்து, இஸ்ரேல் ராணுவம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் காசாவில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் உள்ளூர் நேரப்படி மதியம் அமலுக்கு வந்ததாக அறிவித்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். தெற்கு பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு அச்சுறுத்தல் கொடுத்தாலும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலியப் படைகள் போர் நிறுத்தத்தின் பின் வாபஸ்பெறப்பட்டு வரும் நிலையில், காசா மக்கள் கடும் சிதைவுக்குள்ளான தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.