Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் காஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்: 5,000 வாகனங்கள் ஓடாது என அறிவிப்பு

நாமக்கல்: தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல்லில் தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், ஏஐஎம்டிசி சேர்மன் சண்முகப்பா, எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 3 ஆயில் நிறுவனங்களும் 2025-30ம் ஆண்டுக்கான புதிய டெண்டரில் டேங்கர் லாரி உரிமையாளர்களை பாதிக்கும் பல விதிமுறைகளை கொண்டு வந்தன. இதனால், தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 5 ஆயிரம் வாகனங்களும் டெண்டரில் பங்கேற்க முடியவில்லை. அவர்கள் கேட்டபடி 3500 வாகனங்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கேட்டு, ஆன்லைன் டெண்டரில் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தற்போது, சுமார் 2700 வாகனங்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்து அதற்கான எல்ஓஏ (அனுமதி கடிதம்) கிடைத்துள்ளது. 800 வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்ற அனைத்து வாகனங்களுக்கும் ஆயில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம். உடனடியாக வேலைநிறுத்தம் துவங்குகிறது. இன்று (நேற்று) முதல் தென் மண்டலத்தில் உள்ள அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் காஸ் லோடு ஏற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலம் முழுவதும், சுமார் 5 ஆயிரம் எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.