பாரிஸ்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில், அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது. பிரான்ஸ் நாட்டின் அதிபராக மேக்ரோன் பதவி வகிக்கிறார். இவர் கடந்த 2024 ஜூன் மாதம் பார்லியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதன்படி தேர்வு செய்யப்பட்ட பார்லியில், முதலில் கேப்ரியல் அட்டல் பிரதமராக பதவி வகித்தார். அவர் 2024 செப்டம்பரில் ராஜினாமா செய்த நிலையில், மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது பிரதமராக பிராங்காய்ஸ் பதவியேற்றார்.
இப்படி 9 மாதங்களுக்கு முன் பதவிக்கு வந்த பிராங்காய்ஸ் பேரூவுக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசின் கடன்களை எதிர்கொள்ள அவர் முன்மொழிந்த சிக்கனமான நிதிக் கொள்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த சூழலில், தனக்கான ஆதரவை நிரூப்பிக்க நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொண்டார் பேரூ. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மொத்தம் 577 உறுப்பினா்கள் உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரூக்கு எதிராக 364 உறுப்பினா்களும், ஆதரவாக 194 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.19 உறுப்பினா்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனா்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால், பிரதமர் பதவியை பிராங்காய்ஸ் பேரூ தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதுவரை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஆட்சியில் 4 முறை பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இப்போது புதிய பிரதமரை கண்டறிந்து பதவியேற்கச் செய்ய வேண்டிய நெருக்கடி அதிபர் மேக்ரோனுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் 4வது பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் அங்கு உருவாகியுள்ளது.