Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுதந்திர போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில் பாஸ்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை செங்குன்றம் பாடியநல்லூரை சேர்ந்த அ.பார்வதி. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது கணவர் அண்ணாமலை சுதந்திர போராட்ட தியாகி. அவருக்கு சுதந்திர போராட்ட தியாகிக்கான ஓய்வூதியம் கிடைத்தது. அவரது மறைவுக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் வாங்கி வருகிறேன். சுதந்திர போராட்ட தியாகியை சார்ந்திருக்கும் மனைவி அல்லது வாரிசுகளில் ஒருவருக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்பட வேண்டும்.

இதையடுத்து, எனக்கு இலவச ரயில் பாஸ் வழங்க கோரி கடந்த ஜனவரி 13ம் தேதி ஒன்றிய உள் விவகாரத்துறைக்கு மனு அனுப்பினேன். ஆனால், எனது மனு பரிசீலிக்கப்படவில்லை. எந்த பதிலும் வரவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து எனக்கு இலவச ரயில் பாஸ் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.நந்தகோபாலன் ஆஜராகி, மனுதாரர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, அவரது கோரிக்கையை பரிசீலித்து இலவச ரயில் பாஸ் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மனுவை 2 வாரங்களில் பரிசீலித்து அவருக்கு இலவச ரயில் பாஸ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.