அரசின் இலவச திட்டங்களோடு பெண்களை ஒப்பிட்டு அருவருக்கத்தக்க பேச்சு மனிதராகவே இருப்பதற்கு கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம்: அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்
சென்னை: அரசின் இலவச திட்டங்களோடு பெண்களை ஒப்பிட்டு அருவருக்கத்தக்க கருத்தை வெளியிட்டுள்ள சி.வி.சண்முகம் மனிதராகவே இருப்பதற்கு கூட தகுதியற்றவர் என்று அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்கக் கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். ‘தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும்.
பொண்டாட்டிகளையும் இலவசமாகத் தருவார்கள்’ எனப் பெண்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. ஆளுமை இல்லாத எடப்பாடி பழனிசாமி ஒரு கண்டிப்பைக்கூடச் செய்யவில்லை.
பெண்கள் பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணப் பேருந்துகளை லிப் ஸ்டிக் பூசிய பேருந்துகள் எனக் கேவலமாகப் பேசியவர்தானே எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவரின் அடிவருடி சி.வி.சண்முகத்தின் நாக்கில் நாராசம்தானே வரும். தமிழ்நாடு முதல்வர் பெண்களுக்காகப் பார்த்துப் பார்த்து செயல்படுத்திவரும் மகத்தான திட்டங்களால் பெண்களிடம் அசைக்க முடியாத செல்வாக்கைப் பெற்றிருக்கிறார்.
அது அதிமுக கூட்டணிக் கட்சிகளின் அடிவயிற்றைப் பிசைந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் ’பொண்டாட்டி இலவசம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டுவதற்குக் கூட பெண் இனத்தைப் பயன்படுத்தும் கேடு கெட்டவர் சி.வி.சண்முகம். பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்காக நடைமுறையிலிருக்கும் திட்டங்கள் இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இருப்பதைவிடவும் முன்னோடியானவை, அதனால்தான் இப்போது இந்தியாவில் பல மாநிலங்களில் மகளிருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு. பெண்களை இழிவுபடுத்தி வரும் அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள்.
* பெண்கள் பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணப் பேருந்துகளை லிப்ஸ்டிக் பூசிய பேருந்துகள் எனக் கேவலமாகப் பேசியவர்தானே எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவரின் அடிவருடி சி.வி.சண்முகத்தின் நாக்கில் நாராசம்தானே வரும்.