*மின் வாரிய இயக்குனர் தகவல்
பெரம்பலூர் : விவசாய மின் இணைப்பு கோரி காத்திருந்தவர்களுக்கு இந்த ஆண்டில் 50,000 மின் இணைப்புகள் வழங்கும் பணி விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு மின்சார வாரிய இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.பெரம்பலூர் மாவட்டம் மின்வாரிய மத்திய பண்டகசாலையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு மின்சார வாரிய இயக்குனருமான ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
வடகிழக்குப் பருவ மழையின் போது மின்சாதனங்கள் பழுதாகிவிடும், மின் கம்பங்கள் சாய்ந்து விடும், ஒயர்கள் கட் ஆகிவிடும் என்பதைக் கேட்டறிந்தேன். தமிழகம் முழுக்க இதே போல் அனைத்து மாவட்டங்களின் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறேன்.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்த பணிகளுக்காக மத்திய பண்டக சாலையில் ரூ13 கோடி கையிருப்பு உள்ளதை அறிந்தேன். இவை தவிர தேவையான கம்பங்கள் உள்ளிட்ட உதிரி பாகங்கள் பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்திற்கு தேவையானவை கையிருப்பு உள்ளனவா. தேவைகள் இருப்பின், மாநிலம் முழுக்க அதே போல் தேவைகள் இருப்பின் அவற்றை ஒரு வாரத்திற்குள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இங்கு ஆய்வுக்கு வரும் பொழுது பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பாக சுவரொட்டிகளில் பாதுகாப்பை உணர்த்தும் விதமாக காணப்பட்ட விழிப்புணர்வு வாசகங்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. மின்சார துறை உலகம் முழுக்க மிகவும் ரிஸ்க்கான துறையாக இருந்த போதிலும், அதில் ஏற்படும் உயிரிழப்புகளை பூஜ்ஜியம் நிலைக்குக் கொண்டு வரும் இலக்கோடு பணியாற்றி வருகிறோம்.
மின்வாரிய பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மின்விபத்துகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க தமிழக அளவில் சாலைகளில், பொது இடங்களில், திறந்து கிடக்கும் மின்சாதன பொருட்களை பாதுகாப்பாக மூடி வைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை மின்சார வாரியத்திற்கு சவால் மிகுந்த ஆண்டாக இருக்கும்.
இருந்தும் தேவைக்கு ஏற்ப அனைத்து தரப்பிற்கும் மின் விநியோகத்தை சீராக வழங்குவதை முதல் பணியாக செய்து வருகிறோம். தமிழகத்தில் கிரீன் பவர் எனப்படும் திட்டத்தில் காற்றாடி மூலம் தயாரிக்கும் மின் உற்பத்தியிலும், சூரிய சக்தி (சோலார் பவர்) மூலம் தயாரிக்கும் மின் உற்பத்தியிலும் எந்த ஆண்டிலும் இல்லாதபடிக்கு நாளொன்றுக்கு என்கிற அடிப்படையில் புதிய சாதனையை, புதிய ரெக்கார்டை அடைந்திருக்கிறோம்.
மாவட்ட ரீதியாக குறிப்பிட வேண்டும் என்றால் அட்வான்ஸாக பழுதடைந்த பாகங்களுக்குத் தேவையான மாற்று உதிரி பாகங்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து கொண்டு செல்லவும் தேவையான பணிகளை முடுக்கிவிட்டு இருக்கிறோம்.
குறிப்பாக பத்து நிமிடம் மின் தட்டுப்பாடு ஏற்பட்டாலே மக்கள் அவதிப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருவதால், பொதுமக்களிடம் மின் நுகர்வோரிடம் எதற்காக இந்த நேரத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது, எவ்வளவு நேரத்தில் மின்தடை சரி செய்யப்படும், மின் விநியோகம் சீராக வழங்கப் படும் என்பதை தெரியப் படுத்தி விட்டால் இதில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து விடலாம்.
நம்முடைய துறை சேவை துறை என்பதால் பொதுமக்கள் நிறைய குறைகளை தெரிவிக்கும் போது, வேதனை அடைந்து விடாமல், மின் நுகர்வோரின் தேவைகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும்.விவசாய மின் இணைப்பு கோரி காத்திருந்தவர்களுக்கு ஏற்கனவே 2- லட்சம் மின் இணைப்புகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில் இந்த ஆண்டுக்கான 50,000 மின் இணைப்புகள் வழங்கும் பணி விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.