புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. வில்சன் எம்.பி டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு இடைக்காலத் தீர்ப்புதான் என்றும், இது இறுதி உத்தரவுக்கு உட்பட்டது. உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை சிபிஐக்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றம் என்பது, இதுவரை எஸ்ஐடி மேற்கொண்ட விசாரணைகள் அனைத்தும் சரியானவையே என்ற அர்த்தத்தில் தான் நிகழ்ந்துள்ளதாகக் கருதலாம்.
இந்த வழக்கில் மூன்று பேர் போலியாக மனுத்தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தினோம். மோசடியாக ஒரு தீர்ப்பைப் பெற்றால், அது மோசடி என்று தெரியவந்தால், நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்துவிடும் என்ற கோட்பாடு இங்குப் பொருந்தும். மோசடி செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறைக்கு அனுப்பப்படலாம் என்றும், தீர்ப்பும் ரத்தாகும் என்றும் தெரிவித்தார். நடிகர் விஜயின் கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து கூறியது நீதிமன்ற அவமதிப்பாகும். இவ்வாறு வில்சன் தெரிவித்தார்.