Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

9 ஆயிரம் பேரிடம் ரூ.2,438 கோடி மோசடி செய்த விவகாரம்; ஆருத்ரா இயக்குநர்களுக்கு சொந்தமான வீடுகள் உள்பட 15 இடங்களில் ஈ.டி. சோதனை

  • சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தில் நடவடிக்கை
  • வழக்கில் இருந்து விடுவிக்க தேசிய கட்சி நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்த ஆவணம் சிக்கியது

சென்னை: பொதுமக்களிடம் ரூ.2,438 கோடி மோசடி ெசய்த விவகாரத்தில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் ஏஜென்ட்கள் தொடர்பான சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், வழக்கில் இருந்து விடுவிக்க தேசிய கட்சி நிர்வாகிகளுக்கு பல கோடி பணம் கொடுத்த ஆவணங்கள் சிக்கியது.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தது. அதை நம்பி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது பணத்தை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால், முதல் 2 மாதங்களுக்கு சொன்னபடி முதலீடு பணத்திற்கான வட்டி கொடுத்தனர். அதன் பிறகு யாருக்கும் வட்டி மற்றும் முதலீடு ெசய்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின்படி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, ஆருத்ரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் ரூ.2,438 கோடி அளவுக்கு பணத்தை பெற்று மோசடி செய்தது உறுதியானது. தொடர்ந்து ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனம் என 5 நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்கள் 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் ஆருத்ரா மோசடியில் முக்கிய குற்றவாளியான பாஜ மாநில விளையாட்டு பிரிவு செயலாளர் ஹரீஷ், பெண் இயக்குநர் மாலதி, ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மேலான் இயக்குநர் ராஜசேகர், இயக்குநர்களான உஷா, தீபக் கோவிந்த் பிரசாத், நாராயணி, ரூபேஷ்குமார் மற்றும் ஏஜென்ட்களை கைது செய்தனர்.

இந்த வழக்கில் சினிமா நடிகரும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். மேலும், சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடம் இருந்து தங்கம், சொகுசு கார்கள், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பாஜவின் முன்னாள் மாநில தலைவர் மற்றும் அவருக்கு வேண்டிய ஒரு பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ேபாலீசார் அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை நேற்று ஒரே நேரத்தில் அமைந்தகரையில் உள்ள ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் முக்கிய இயக்குநர்களாக இருந்த வில்லிவாக்கத்தில் உள்ள இயக்குநர் ராஜசேகர் வீடு, காஞ்சிபுரத்தை சேர்ந்த பாஜ முன்னாள் விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ஹரீஷ் வீடு, பெண் இயக்குநர் மாலதி வீடு, சென்னை வில்லிவாக்கத்ைத சேர்ந்த ராஜசேகர் வீடு, கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த உஷா வீடு, பூந்தமல்லி திருமால் நகரை சேர்ந்த தீபக் கோவிந்த் பிரசாத் வீடு, நாராயணி வீடு, சிட்லப்பாக்கம் சந்தியா கார்டன் பகுதியை ேசர்ந்த ரூபேஷ்குமார் வீடு என சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 15 இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த பணத்தை சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்த ஆவணங்கள், தமிழகம் முழுவதும் பல கோடிக்கு நிலங்கள் வாங்கி குவித்த ஆவணங்கள், வழக்கில் இருந்து விடுவிக்க தேசிய கட்சி தலைவர்களுக்கு பல கோடி ரூபாய் பணம் கொடுத்ததற்கான முக்கிய ஆதாரங்கள், மற்றும் பணம் கொடுத்ததற்கான பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் சம்பந்தபட்ட இயக்குநர் ஒருவர் அளித்த ஆதாரங்கள், துபாயில் முதலீடு செய்யப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில், ஆருத்ரா வழக்கில் தொடர்புடைய இயக்குநர்கள் பெயரில் எத்தனை கோடிகள் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணை முடிந்த பிறகு தான் மோசடி தொடர்பாக முழுமையான தகவல்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆருத்ரா வழக்கில் விசாரணை நடத்தி வருவதால், ஆருத்ரா வழக்கில் இருந்து விடுவிக்க பல நூறு கோடி பணம் பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர். இந்த சம்பவத்தால் தமிழகத்தில் அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜ நிர்வாகியை மிரட்டி ரெய்டா

கடந்த சில நாட்களாக பாஜவுக்கு எதிரான நடவடிக்கையில் முன்னாள் மாநில தலைவர் ஒருவர் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் ஆருத்ரா நிறுவனம் உள்பட பல நிறுவனங்களில் மிரட்டி பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதேநேரத்தில் பதவி இழந்த முன்னாள் மாநில தலைவர், ஆடு மட்டுமே வளர்ப்பதாகவும், விவசாயம் பார்ப்பதாகவும், தன்னுடைய நண்பர்கள் செலவுக்கு பணம் கொடுப்பதாகவும் கூறி வந்தவர், தற்போது பல கோடி ரூபாய்க்கு நிலங்களை வாங்கிக் குவித்து வருகிறார். தொழில்களை தொடங்குகிறார். அவர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனால், அவரை மிரட்டுவதற்காக இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.