Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் பெரியார் பல்கலை சிண்டிகேட் பிரதிநிதி தேர்தலில் மாஜி துணைவேந்தர் வெற்றி

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட், செனட் பிரதிநிதிகள் மற்றும் அரசுப் பிரதிநிதி ஒருவர் அடங்கிய தேடுதல் குழு அமைக்கப்படவுள்ளது.

செனட் சார்பில் தேர்வு செய்ய தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார். சிண்டிகேட் சார்பில் தேர்வு செய்ய 3 பேர் வேட்புனு அளித்தனர். கோவை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் மணியன், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தங்கராஜ் மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பிச்சுமணி ஆகியோர் வேட்புமனு அளித்தனர்.

இதில், மணியன் வாபஸ் பெற்றார். நேற்று சிண்டிகேட் பிரதிநிதிக்கான தேர்தல் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில், பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தங்கராஜ், 16 வாக்குகள் பெற்று, வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இத்தேர்தலுக்கான ஒப்புதல் வழங்க, சிறப்பு சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது.

இதில், தேடுதல் குழுவிற்கு தங்கராஜ் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பல்கலை.யில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் மாஜி பதிவாளர் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து சிண்டிகேட் உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துணைவேந்தரும், சிண்டிகேட் கூட்டத்தின் தலைவருமான ஜெகநாதன் வெளியேறினார்.