Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாஜி அமைச்சர்களின் மோதலால் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாஜி அமைச்சர்களுக்குள் இருந்து வரும் பனிப்போரால் தொண்டர்கள் அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ ஆதரவாளர்களுக்கும், தேனிக்காரர் அணியில் இருந்து வந்த மற்றொரு மாஜி அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையேயான மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாம்.. கட்சியின் நிர்வாகிகளின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தேனிக்காரர் அணியில் இருந்து வந்த மற்றொரு மாஜி அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வருகிறாராம்.. இதன் மூலம் மேலிடத்தில் தனது செல்வாக்கு உயரும் என அவர் நினைக்கிறாராம்.. தொடர்ந்து இவருக்கு போட்டியாக ‘மணியானவரும்’ தனது ஆதரவாளர்களுடன் நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாராம்.. இருவருக்கும் இடையே இருந்து வரும் பனிப்போரால் தொண்டர்கள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் கடும் அதிருப்தியில் இருந்து வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மகனுடைய செயல்தான் ஒவ்வொரு நாளும் தந்தையை வேகப்படுத்துறதா அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்களே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தந்தை -மகன் விவகாரம் முற்றியுள்ள நிலையில் 16 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க தந்தை நோட்டீஸ் அனுப்பினாரு... ஆனால் அதற்கான பதில் கிடைக்கலையாம்.. அதே நேரத்தில் மகனுடைய செயல் ஒவ்வொரு நாளும் தந்தையை வேகப்படுத்துவதாக அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க.. தந்தையால் மந்திரியானவர்கள் எல்லோரும் துரோகம் செஞ்சிட்டுபோனதால, மாவீரன், தியாக செம்மல் உள்ளிட்டோர் தான் மகனை அரசியலுக்கு கொண்டுவந்தே ஆகணுமுன்னு ஒற்றை காலில் நின்னு களம் இறக்கினாங்களாம்.. ஆனால் மகனே தனக்கு துரோகம் இழைத்ததால் தான் அவர் மிகுந்த ஆத்திரத்திற்கு ஆளானாராம்... தந்தையை எவ்வளவு சிறுமைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு தனது அடிப்பொடிகளை வைத்து அசிங்கப்படுத்தியதாக தந்தை நினைக்கிறாராம்.. இதன் வெளிப்பாடு தான் 50வது திருமண நாளை ஊரறிய கொண்டாடியதாகவும் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் சொல்றாங்க.. அதே நேரத்தில் இருவருக்குமான பிரிவுக்கு தந்தை பக்கம் இருக்கும் பெண் காரணமுன்னு மகன் தரப்பும், மகன் தரப்பில் இருக்கும் பெண் தான் காரணமுன்னு தந்தை தரப்பும் நினைக்கிறாங்களாம்.. மாம்பழம் கட்சியின் தலைவர் என்றால் அது ஒருவர் தான். அவர் சின்னவர் தான் என அவரது பக்கம் இருக்கும் பெண் நினைப்பதாக தந்தை தரப்பினர் சொல்றாங்க.. இதற்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்றாங்க.. கடந்த 5 ஆண்டுகளாக கட்சியின் எந்த பிரிவுக்கும் தலைவர், செயலாளர் போடாமல் விட்டது ஏன்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்புறாங்க.. இதனால் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு போனதாகவும், இதனை தெரிந்து கொண்ட தந்தை, பேரனை உள்ளே கொண்டு வந்தாருன்னும் சொல்றாங்க.. இந்த மோதலில் பெருநஷ்டம் மகனுக்கு தானாம்.. இந்தச்சூழலில் ஒழுங்கு நடவடிக்கை கூட்டம் கூடி ஆலோசனை நடத்தினாங்களாம்.. இன்னும் ரெண்டுநாள் கூட்டத்திற்கு பிறகு தந்தை மகனுக்கு வழங்கிய செயல்தலைவர் பதவியையும் பறிக்க போறாராம்.. அதோடு நான் தொடங்கிய கட்சி இது.. வேண்டுமானால் இன்ெனாரு கட்சியை தொடங்கி தலைவராகி நடத்திக்கலாமுன்னும் தந்தை சொல்லப்போறதா கட்சிக்காரங்க சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குக்கர்காரரும் தனது வலிமையை காட்ட வரும் டிசம்பர் மாதம்தான் கூட்டணிபற்றி அறிவிப்போம் என அறிவிச்சிருக்காரே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியும் மலராத தேசிய கட்சியும் மீண்டும் ஒட்டிக் கொண்டாலும் அந்த கூட்டணியில் தீராத குழப்பம்தான் நிலவுகிறதாம்.. மலராத தேசிய கட்சியின் கூட்டணியில் எந்த கட்சிகள் இருக்கின்றன என்பது அந்த கட்சியின் மாநில தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏவுக்கே தீராத குழப்பமாக இருக்காம்.. ஏற்கனவே பிரதமர் திருச்சி வந்த போது சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்காத விரக்தியில் இருந்த தேனிக்காரர் கூட்டணியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்து விட்டார். அதுமட்டுமல்ல, இதற்கு சேலம் காரரின் பிடிவாதமும் ஒரு காரணமாம். அதாவது இலை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேனிக்காரர், சின்ன மம்மி, பிரிந்து சென்ற குக்கர்காரர் ஆகிய யாரையும் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என நிபந்தனை போட்டாராம்.. அதனால்தான் திருச்சி வந்த பிரதமரும் தேனிக்காரருக்கு நேரம் ஒதுக்காமல் ஒதுக்கி விட்டாராம்..

இதுதொடர்பாக தேனிக்காரருக்கும், அல்வா ஊரின் எம்எல்ஏவான மாநில தலைவருக்கும் கூட காரசார வார்த்தை மோதல் நடந்திருக்கு.. அதே நேரத்தில் குக்கர்காரரை தங்கள் கூட்டணியில் இருந்து இழக்க விரும்பாத தேசிய கட்சியின் மாநில தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏ, அவர் எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார் என உறுதிப்படுத்தினாராம்.. அவர் கூற்றுக்கு மாறாக காசியில் முடியும் மாவட்டத்திற்கு விசிட் அடித்த குக்கர்காரர், கடந்த 2024 தேர்தலில் மலராத தேசிய கட்சிக்கு நிபந்தனையின்றி தான் ஆதரவு கொடுத்தோம்.. நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் தான் அறிவிப்போம் என்று தங்களது வலிமையை காட்டுகிறாராம்.. இதனால் தேசிய கட்சியின் மாநில தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏ கவலையோடு இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கமகம வாசம் பிடித்த இலைக்கட்சி நிர்வாகிகளால் மாஜி ஷாக் ரொம்பவே ஷாக் ஆயிட்டாராமே எதுக்காம்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் இலைக்கட்சியின் சார்பில் ஆங்காங்கே பூத் கமிட்டி கூட்டம் நடந்து வருது.. சமீபத்தில் கோட்டை என முடியும் தொகுதியில் குண்டு என முடியும் ஊரின் 2 ஒன்றியங்களுக்கான கூட்டம் நடந்திருக்கு.. இதில், மாஜி ஷாக் துறை மந்திரி, சிட்டிங் பெண் எம்எல்ஏ உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துகொண்டாங்களாம்.. அப்போது ஒரு நிர்வாகியின் பெயரை வாசிக்காததால், ஷாக் மாஜி முன்னிலையில் கோஷ்டி மோதல் வாக்குவாதத்தில் முடிந்ததாம்.. இதை தொடர்ந்து நத்தத்துக்காரர் பேசத் துவங்கியதும் ஆர்டர் தந்த பிரியாணி வந்துள்ளது.. கமகம வாசம் பிடித்த இலைக்கட்சியினர், பந்தியில் இடம் பிடிக்க வேண்டுமென முண்டியடித்து கலைந்து சென்றதால் அரங்கத்தில் இருந்த இருக்கைகள் அனைத்தும் காலியாகிவிட்டதாம்.. இதனால், மாஜி ரொம்பவே ஷாக் ஆயிட்டாராம்... இதை பார்த்த கட்சியினர், ‘காலை 11 மணிக்கு வருவதாக சொன்னவர் 1 மணிக்கு மேல் தான் வந்தார். இதன்பிறகு எப்போது அவர் பேசி முடிக்க... நாம் எப்ப சாப்பிட’ என அவர் காதில் கேட்கும்படியே கூறிச் சென்றார்களாம்.. இதனால் கூட்டத்தை இடையிலேயே முடித்து விட்டு, மாஜி ஷாக் கோபத்துடன் கிளம்பிச் சென்றாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.