வேறொருவரின் நகைகளை அடகுவைத்து ரூ.90 லட்சம் மோசடி செய்த வழக்கு; தலைமறைவாக இருந்த முன்னாள் வங்கி மேலாளர் ஐதராபாத்தில் கைது: சைதாப்பேட்டை போலீஸ் நடவடிக்கை
சென்னை: வேறொருவரின் 162 சவரன் நகைகளை அடகுவைத்து ரூ.90 லட்சம் மோசடி ெசய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முன்னாள் வங்கி மேலாளரை சைதாப்பேட்டை போலீசார் ஐதராபாத்தில் கைது செய்தனர். சென்னை சைதாப்பேட்டை விஜிபி. சாலையை சேர்ந்தவர் சுலைமான்(32). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கிண்டி லாயர் ஜெகநாதன் தெருவில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இதனால் அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் செலுத்தியும், பணத்தை எடுத்தும் வந்துள்ளார்.
அப்போது வங்கியின் மேலாளர் சாமிநாதன், எங்கள் வாடிக்கையாளர் நீங்கள் என்பதால் இனி உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் நேரில் வரவேண்டாம். எனக்கு போன் செய்தால் நான் ஊழியர்கள் மூலம் பணத்தை கொடுத்து அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி சுலைமான் பணம் தேவைப்படும் போதும், வங்கி மேலாளர் சாமிநாதனை தொடர்பு கொள்வார். அவர் ஊழியர் ஒருவரை சுலைமான் வீட்டிற்கு அனுப்புவார். அப்போது, ஊழியர் படிவங்களை பூர்த்தி செய்து தேவையான பணத்தை கொடுத்துவிடுவார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 2ம் ேததி பணம் தேவைக்காக சுலைமான் வங்கி மேலாளர் சாமிநாதனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தன்னிடம் உள்ள 162 சவரன் நகைகளை அடகுவைத்து பணம் தரவேண்டும் என்று கோரியுள்ளார். அதன்படி வங்கி மேலாளர் சாமிநாதன் வங்கியில் காசாளராக பணியாற்றும் பிரசாத் என்பவரை வீட்டிற்கு அனுப்பி 162 சவரன் நகைகளை வாங்கி கொண்டு, படிவங்களில் சுலைமானிடம் கையெழுத்து வாங்கி கொண்டு வந்துள்ளார்.
பிறகு சாமிநானிடம், சுலைமான் பணத்தை கேட்ட போது, வங்கியில் சர்வர் வேலை செய்யவில்லை. அதேநேரம் ஆடிட்டிங் பணி நடைபெறுகிறது என கூறி பணத்தை கொடுக்காமல் இழுத்து அடித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த சுலைமான் நேரடியாக வங்கிக் சென்று விசாரித்த போது, மேலாளர் சாமிநாதன் வங்கி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக அவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டது தெரியவந்தது.
அதைதொடர்ந்து சம்பவம் குறித்து சுலைமான் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, வங்கி மேலாளராக பணியாற்றி வந்த சாமிநாதன் தனக்கு கீழ் நிலையில் உள்ள வங்கி அப்ரேட்டிங் மேலாளர் திவாகர் மற்றும் காசாளர் பிரசாத் ஆகியோருடன் இணைந்து கூட்டு சதி மூலம் சுலைமான் கொடுத்த 162 சவரன் நகைகள் வங்கியில் உபயோகத்தில் இல்லாத வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் நகைகளை அடமானம் வைத்து, போலி கையெழுத்து போட்டு ரூ.90 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட கே.கே.நகர் உதயம் காலனி மேற்கு பகுதியை சேர்ந்த வங்கியின் அப்ரேட்டிங் மேலாளர் திவாகர்(32) மற்றும் புழுதிவாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த பிரசாத்(25) ஆகியோரை கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான முன்னாள் வங்கி மேலாளர் சாமிநாதனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்து சென்று முன்னாள் வங்கி மேலாளரான தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த சாமிநாதனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 162 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 செல்போன்கள் மீட்கப்பட்டது.
