சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் தொடங்குகிறது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.3,250 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் 2021ல் உள்நாட்டு கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் நிறுத்தியது. இதனால் சுமார் 2,500 பேர் வேலை இழந்தனர். ஃபோர்டின் இந்த வெளியேற்றம் ஆட்டோமொபைல் துறையில் ஒரு பெரிய பேசுபொருளானது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ சென்றிருந்தபோது ஃபோர்டு நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். முதலமைச்சரின் அழைப்பை ஏற்று மீண்டும் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் தொடங்குகிறது. ஆண்டுக்கு 2.35 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது மறைமலைநகர் தொழிற்சாலை. இந்த மாபெரும் முதலீட்டின் மூலம், ஃபோர்டு நிறுவனம் தனது மறைமலைநகர் ஆலையில் ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான அதிநவீன இன்ஜின்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
இவை பெரும்பாலும் உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அமெரிக்காவிற்கு அனுப்பப்பட வாய்ப்பில்லை என்றாலும், பிற சர்வதேச சந்தைகள் இலக்காக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம், சென்னையில் சுமார் 600 புதிய நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
  
  
  
   
