சென்னை: தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 3.20 கி.மீ நீளமுள்ள நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2024 ஜனவரி 19ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த பணியின் முன்னேற்றத்தை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தற்போது 40 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மெட்ரோ சுரங்கப்பாதை மற்றும் பிற இடங்களில் நடைபெறும் அடித்தள, மைக்ரோ பைல், ஜியோ சிந்தடிக் லேயர் மற்றும் வெல்டிங் பணிகளை விரைவாக முடிக்கவும், மழைக்காலத்திற்கு முன் அடித்தள பணிகள் நிறைவு பெறும் வகையில் வேகப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பணிகள் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து காவல்துறை, மின் வாரியம், மாநகராட்சி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம், வனத்துறை ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து, பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பணிகள் நடைபெற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அதிகாரி சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் சரவண செல்வம், ஒப்பந்ததாரர் ெஜ.குமார், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.