ஜவ்வாதுமலையில் தொடர் கனமழை; ஆற்றில் வெள்ளப்பெருக்கு 4 தரைப்பாலங்கள் மூழ்கியது: வேலூர் அருகே மக்கள் தவிப்பு
வேலூர்: ஜவ்வாதுமலை தொடரில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக ஒடுகத்தூர் உத்திரகாவேரி ஆற்றில் இன்று அதிகாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 4 தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல், ஜவ்வாதுமலை தொடரிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதலே ஒடுகத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இரவு தொடங்கிய மழை விடியவிடிய கொட்டி தீர்த்தது. மேலரசம்பட்டு பகுதியில் உள்ள உத்திர காவேரி ஆற்றில் இன்று அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளான குளம், குட்டை, கிணறுகள் போன்றவற்றில் வேகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது.
இந்த ஆறானது மேலரசம்பட்டில் தொடங்கி சேர்பாடி, ஒடுகத்தூர், குருவராஜாபாளையம், அகரம், பள்ளிக்குப்பம், கீழ்கிருஷ்ணாபுரம், வெட்டுவாணம் வழியாக பள்ளிகொண்டா பாலாற்றில் கலக்கிறது. இதனால் இவ்வழியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு இது குடிநீராதாரமாக விளங்குகிறது. ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக வண்ணாந்தாங்கல் ஊராட்சி தோப்பூர்-கொல்லைமேடு, கத்தேரிகுப்பம்-காளியம்மன்பட்டி, மடையாப்பட்டு-கெங்கசாணிகுப்பம், மடிகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் குறுக்கே இருந்த 4 தரைப்பாலங்கள் மூழ்கியது. அதேபோல், மேம்பாலம் கட்டுவதற்காக ஒடுகத்தூர்-நேமந்தபுரம் செல்லும் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் ஏற்கனவே இடித்து அகற்றப்பட்டு விட்டது. இதனால், பொதுமக்கள் அங்கு பயன்படுத்தி வந்த மண் சாலையும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், அத்திகுப்பம், நேமந்தபுரம், ஓட்டேரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் ஒடுகத்தூருக்கு செல்ல சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.