தேனி : கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க 2வது நாளாக வனத்துறையினர் தடை விதித்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது.
இந்த அருவியில் நேற்று, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், பாம்பார்புரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து அருவிப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர், அருவியில் குளித்துக் கொண்டிருந்த பயணிகளை உடனடியாக எச்சரித்து, அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் சூழல் உள்ளதால் நேற்று பிற்பகல் முதல் சுற்றுலா பயணிகளை குளிக்கவும், அருவி பகுதிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்தனர்.

