Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘மோன்தா புயல்’ எதிரொலியாக இன்று ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் 6 விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் 3 விமானங்கள் ரத்து

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள 'மோன்தா' புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் ஆந்திரா மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு - தென்கிழக்கில் 230 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே இன்றிரவு தீவிரப் புயலாக கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மோன்தா புயல் ஆந்திராவில் இன்றிரவு கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. மோன்தா புயல் எதிரொலியால் ஆந்திர கடலோரப் பகுதி வழியே செல்லும் பல ரயில்களின் புறப்பாடு நேரம் மாற்றம் என ரயில்வே அறிவித்துள்ளது. இதனை அடுத்து காக்கிநாடாவில் இருந்து பெங்களூருக்கு இன்று செல்லும் ஷேஷாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ‘மோன்தா புயல்’ எதிரொலியாக விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை 9.45 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ராஜமுந்திரியிலிருந்து சென்னைக்கு மதியம் 1.35 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு மதியம் 1.40 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு மதியம் 1.45 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு இரவு 7.20 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு இரவு 9.05 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 6 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 3.55 மணிக்கு சென்னையில் இருந்து விஜயவாடா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 6.15 மணிக்கு சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய மூன்று விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை மற்றும் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தால் மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் எனவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.