Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக கடலில் மீன்பிடி தடைக்காலம் ஏப்.15ல் துவக்கம்

ராமேஸ்வரம்: தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் வரும் 15ம் தேதி துவங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் வெவ்வேறு மாதங்களில் மீன்பிடி தடைக்காலத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி வருகிறது. இக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படும். இத்தடை கடலோர மாநிலங்களில் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக கடல் பகுதியில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன் இனப்பெருக்க காலமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த இரண்டு மாத காலம் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா மற்றும் வங்கக்கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை உள்ளது. இதனால் தூத்துக்குடி முதல் சென்னை வரையுள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரை நிறுத்தம் செய்யப்படும். தமிழக கடலில் வரும் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்கவுள்ள நிலையில், ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தங்களது படகுகளில் இருந்து மீன்பிடி உபகரணங்களை கரைக்கு இறக்க தயாராகி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்படும்.

படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழப்பார்கள். மீன் அள்ளும் கூலிகள், சிறு வியாபாரிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்களும் வேலை இழக்கும் சூழ்நிலை உண்டாகும். இதனை கருத்தில் கொண்டு மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.