Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகை, காரைக்கால், புதுகை, தஞ்சை மீனவர்கள் முடக்கம்: ரூ.65 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு

நாகை: நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 25,000 மீனவர்கள் முடங்கினர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் சுமார் ரூ.65 கோடி மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக டெல்டா கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கடல் சற்று சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாகை, புதுகை, தஞ்சை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாகை மீனவர்கள் கடந்த 18ம் தேதி முதல் கடலுக்கு செல்லவில்லை. இன்று 5வது நாளாக முடங்கினர். இதனால் 700 விசைபடகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளது.

வேதாரண்யம் பகுதியில் உள்ள வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடிக்கரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடந்த 18ம் தேதி முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இன்று 6வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் மீனவர்கள், அதனை சார்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். மயிலாடுதுறையில் பழையாறு, கொடியம்பாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி உள்பட 27 மீனவ கிராமங்களிலிருந்து 400 விசைபடகு 1000 பைபர் படகுகள் இன்று 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. காரைக்கால் மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 21ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 11 கிராம மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

இதனால் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள, 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 370 விசைபடகுகள் இன்று 7வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் 2000 மீனவர்கள் முடங்கினர். தஞ்சையில் 19ம் தேதியிலிருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரத்தில் 155 விசை படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளது. 1000 மீனவர்கள் ஓய்வில் உள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் நாகையில் கடந்த 5 நாட்களில் ரூ.15 கோடியும், மயிலாடுதுறையில் ரூ.10 கோடி, தஞ்சையில் ரூ.10 கோடி புதுகையில் ரூ.15 கோடி, காரைக்காலில் ரூ.15 கோடி என சுமார் ரூ.65 கோடி மீன் ஏற்றுமதி, வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 25,000 மீனவர்கள் முடங்கினர். 1 லட்சம் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.