எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் துப்பாக்கி முனையில் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
மயிலாடுதுறை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(32), சிவதாஸ்(20), குழந்தைவேல் (27), ரஞ்சித்(30), ராஜ்(30), கலை(30), குகன்(28), பிரசாத்(32), அகிலன்(27), ஆகாஷ்(27), ராபீன்(29), ராஜ்குமார்(30), தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்து(40), கடலூரை சேர்ந்த பாரதி(40) ஆகி 14பேர் கடந்த 8ம்தேதி காலை 7 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்திய கடல் எல்லையான அனலை தீவு அருகே நேற்று அதிகாலை 4 மணியளவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் எல்லை தாண்டி வந்ததாக கூறி துப்பாக்கி முனையில் 14 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள், ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

