தண்டையார்பேட்டை: திருவள்ளூர் அருகே புலிகேட்டு, சின்னம்மன் கோயில் தெரு, அரங்கன்குப்பத்தை சேர்ந்தவர் மீனவர் சந்தோஷ் (40). இவர், தனது மனைவி சாமந்தி, 2 மகள், ஒரு மகன் மற்றும் தாயுடன் வசித்து வந்தார். கடந்த 11ம் தேதி எண்ணூரில் வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார் சந்தோஷ். அனல் மின்நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சந்தோஷ் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 18ம் தேதி சந்தோஷுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம், அவரது குடும்பத்தினரிடம் பேசி, சந்தோஷின் உடல் உறுப்புகளை தானம் செய்யம்படி தெரிவித்தனர்.
அதற்கு அவரது குடும்பத்தினர் சம்மதம் அளித்தனர். இதையடுத்து, டாக்டர் அரவிந்த் தலைமையில் சந்தோஷிடம் இருந்து 2 சிறுநீரகங்கள், கல்லீரல், இதய வால்வு, தோல் ஆகிய 5 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இவை, அரசு விதிமுறைப்படி பதிவு செய்து காத்திருக்கும் அரசு மருத்துவமனையை சேர்ந்த நபர்களுக்கு வழங்கப்படும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சந்தோஷின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.