சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் (மீன்வள மற்றும் மீனவ நலத்துறை) பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு நடைபெற்ற தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 2.6.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்த பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு (இரண்டாம் கட்டம்) மற்றும் கலந்தாய்வு வரும் 26ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்வர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடம் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகமாக அழைக்கப்படும் தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதம் தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான www. tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.