உலகிலேயே முதன்முறையாக மாற்று ரத்த பிரிவை சேர்ந்த பெண்ணுக்கு மகனின் கல்லீரலை பொருத்தி சாதனை: மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை அசத்தல்
சென்னை: கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட மாலத்தீவை சேர்ந்த மாற்று ரத்தப் பிரிவை பெண்ணிற்கு, அவரது மகனின் கல்லீரலை பொருத்தி மியாட் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு மியாட் மருத்துவமனையில் நேற்று நடந்தது. மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், திட்ட இயக்குனர், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் ராஜ், திட்ட முதன்மை அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் மதிவாணன், மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் ஜோஸ்வா டேனியல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: மாலத்தீவை சேர்ந்த அமீனாத் நெபா என்ற பெண்ணுக்கு கல்லீரல் நோய், மண்ணீரல் வீக்கம், சர்க்கரை, தைராய்டு, கொழுப்பு மற்றும் இதய நோய் இருந்தன. கல்லீரல் சிரோசிஸ் என்னும் செயலிழப்பு, உணவுக் குழாய் நரம்புகள் பெரிதாகி, மேல் இரைப்பை குடல் ரத்தப்போக்கு மற்றும் ரத்த வாந்தி மற்றும் மூக்கில் ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டார்.
மிகவும் மோசமான உடல்நிலையால் 6 மாதமே அவர் உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் மதிப்பிட்டனர். அடிக்கடி மூக்கில் ரத்தம் வந்ததால் சிகிச்சைக்காக மாலத்தீவில் உள்ள மியாட் மருத்துவ முகாமுக்கு சென்றுள்ளார். அங்கு, இரைப்பை குடல் நிபுணர் அவரது நிலையை மதிப்பாய்வு செய்து மருந்தை மாற்றினார். இதனால், மூக்கில் ரத்தம் வடிதல் நின்றது. இதையடுத்து, ‘ஓ’ பாசிட்டிவ் ரத்தம் கொண்ட அவரது மகன் முகமத் அலி நிசார் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தாய்க்கு கொடுக்க முன்வந்தார். இதனால் சென்னையில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனைக்கு அமீனாத் கொண்டு வரப்பட்டார். அவருக்கு ‘பி’ பாசிடிவ் ரத்த வகை இருந்தது.
மருத்துவமனையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரத்தம் உறையமல் கணக்கீடு செய்து நோயாளியின் சொந்த ரத்தத்தை ஆட்டோ லோகஸ் செல்-சேவர் இயந்திரம் மூலம் சேமித்து தயாராக வைத்து, ரத்த மாற்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் கல்லீரல் மாற்று நிபுணர்களின் கூட்டு அணுகுமுறை மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. இதுபோன்ற சிகிச்சை உலகிலேயே முதன்முறையாக மியாட் மருத்துவமனையில் நடந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.