அபுதாபி: வங்காளதேசத்துடனான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட் செய்து 48.5 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக விளையாடிய கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 60 ரன்னும், தவ்ஹித் ஹ்ரிடோய் 56 ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்கம் முதல் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. குர்பாஸ், அஹமத் ஷா ஆகியோர் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அஷ்மத்துல்லா ஒமர்சாய் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஏற்கனவே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் 3-0 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.