ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் நெல் நாற்று நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, கோட்டூர்,கோபாலபுரம், அம்பராம்பாளையம், வேட்டைக்காரன்புதூர்,காளியாபுரம்,ஒடையகுளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நெல் சாகுபடி அதிகளவில் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் ஆழியாற்றிலிருந்து தண்ணீர் திறப்பை பொறுத்து விவசாயிகள் நெல் விதைப்பில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் இந்த ஆண்டில் கடந்த ஜனவரியில் சாகுபடி செய்யப்பட்ட நெல் நன்கு விளைந்ததையடுத்து ஏப்ரல் இறுதியில் அறுவடை செய்யப்பட்டன.பின் கடந்த மாதம் பருவமழை துவக்கம் மற்றும் ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது சீரமைத்தனர்.
இதைத்தொடர்ந்து சுமார் 3 வாரத்துக்கு முன்பு நாற்றங்கால் ஏற்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.அவை வளர்ச்சியடைந்து நெல் நாற்றுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து தற்போது ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் முதல்போக நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நாற்று நடும் பணியை துவங்கியுள்ளனர்.இதில் காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் நாற்று நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விரைந்து நாற்று நடவு மேற்கொள்ள இயந்திரம் மூலம் அணி நடவு நடைபெற்றது. இதனை, வேளாண்மை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தற்போது சாகுபடி செய்யப்படும் நெல் வரும் நவம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.