Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

புதிய குற்றவியல் சட்டங்களின்படி 2026 முதல் எப்ஐஆருக்கு 3 ஆண்டுக்குள் தீர்வு: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தகவல்

டெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம், பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் மூன்று ஆண்டுகளுக்குள் முடித்து வைக்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. நீதி வழங்கும் முறையை நவீனமயமாக்கவும், குடிமக்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரியானாவின் குருக்ஷேத்ராவில் இந்த புதிய சட்டங்கள் குறித்த கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘வரும் 2026ம் ஆண்டு முதல், புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் (எப்ஐஆர்) சராசரியாக மூன்று ஆண்டுகளுக்குள் முடித்து வைக்கப்பட்டு, நீதி உறுதி செய்யப்படும். இனிமேல் நீதிமன்றங்களில் வாய்தா மேல் வாய்தா வாங்கும் நிலை இருக்காது. இந்த நடவடிக்கை, நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைக் குறைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறித்த காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்யும்’ என்றார்.