உரிமம் பெறாத செல்லப்பிராணிகளுக்கு இன்று முதல் ரூ.5000 அபராதம்: வீடுவீடாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
சென்னை: உரிமம் பெறாத செல்லப்பிராணிகளுக்கு இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. அதேநேரம், அவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாக உள்ளன. குறிப்பாக, நாய்க்கு முறையாக தடுப்பூசி, ஓட்டுண்ணி நீக்காதாதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வளர்ப்பு நாய்கள் கடித்து காயப்படுத்துகின்றன. மேலும், நாய்களை வளர்க்க முடியாமல் பலர், அவற்றை சாலையில் திரிய விடுவதும் தொடர்கிறது. இவற்றை தவிர்க்க, அனைத்து செல்லப் பிராணிகளையும் பதிவு செய்வதுகட்டாயம் என, மாநகராட்சி தெரிவித்தது. அவ்வாறு பதிவு உரிமம் பெறும் நாய்களுக்கு அக்., 8ம் தேதி முதல், ‘மைக்ரோ சிப்’ பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளுக்காக மாநகராட்சி இனக்கட்டுப்பாட்டு மையங்கள், கால்நடை மருத்துவமனையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகாம் நேற்றுடன் முடிந்த நிலையில் உரிமம் பெறாத செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மீது இன்று முதல் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி இணையதளத்தில், 98,523 செல்லப்பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், 56,378 செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெற்று, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 40,274 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறப்படாமல் உள்ளன. நேற்றைய தினம் கடைசி நாள் என்பதால் அனைத்து முகாம்களிலும் கூட்டம் அலைமோதின. நேற்று 2,930 பேர் உரிமம் பெற்றனர்.
தற்போது வரை 50 சதவீத செல்லப்பிராணிகளுக்கு மட்டும் தான் உரிமம் பெறப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இன்று முதல் வீடு வீடாக செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகிறதா, அதற்கான உரிமம் பெறப்பட்டுளதா என ஆய்வு செய்ய உள்ளோம். இந்த ஆய்வில் யார் யார் உரிமம் பெற்றுள்ளனர், அவ்வாறு உரிமம் பெறாத செல்லப்பிராணி உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் வசூலித்து உரிய நடவடிக்கையையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


