தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகரத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் செல்வன் எத்திராஜ் (வயது 16) என்ற சிறுவன் 11.10.2025 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவனூர் கிராமத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வாணாபுரம் வட்டம், திருவரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு அருகிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 12.10.2025 அன்று திருக்கோவிலூர் வட்டம், ஆவியூர் கிராமத்தில் மேற்படி சிறுவனின் உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கம் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.