நிதி மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி தேவநாதன் யாதவ் ரூ.100 கோடி டெபாசிட் செய்யவில்லை: உயர் நீதிமன்றத்தில் முதலீட்டாளர்கள் தரப்பு முறையீடு
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேவநாதன் யாதவ் 100 கோடி ரூபாய் செலுத்தவில்லை, சரணடையவில்லை என்று முதலீட்டாளர்கள் சங்கம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யபப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனட் பண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உள்ளிட்டோர் மூன்றாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அக்டோபர் 30ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், 100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும். அவர் விசாரணைக்கு தேவையானபோது ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்கக்கூடாது. வேறு எங்கும் செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேவநாதன் யாதவ் சரணடைய மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன் முன்பு வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு முதலீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, தேவநாத யாதவ் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி 100 கோடி ரூபாய் செலுத்தவில்லை. சரணடையவும் இல்லை. மேலும் ஒரு வார கால அவகாசம் வழங்கியும் அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை என்று முறையிட்டார். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி, நிபந்தனை நிறைவேற்ற விட்டால் அவரை காவல்துறையினர் கைது செய்வார்கள். இந்த வழக்கை உடனடியாக பட்டியலிட முடியாது என்று தெரிவித்தார்.

