டெல்லி: பீகாரில் சிறப்பு திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பீகாரில் வரும் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் மாதத்தில் சட்ட பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் 7.24 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன.
சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தன. பெயர் விடுபட்டவர்கள்,உரிமை கோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 1ம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் பீகாரில் சிறப்பு திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது விவரங்களை ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் வாக்காளர்கள் எண்ணிக்கை தீவிர திருத்தத்துக்குப் பின் 7.42 கோடியாக சரிந்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு முன்பு பீகாரில் 2024 ஜூனில் 7.89 கோடியாக இருந்தது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6% குறைந்துள்ளது. அதே நேரத்தில், 21.53 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். பீகாரில் 3 மாதங்களாக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையால் 68.5 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.