மதுரை: தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது என்று ஐகோர்ட் மதுரை கிளையில் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தமானது மற்றும் நில பயன்பாடு தொடர்பான வழக்குகள் உள்ளன. ஒரு தரப்பினர் மலையை சமணர் குன்று என்று அறிவிக்கக் கோரியும், மற்றொரு தரப்பினர் கோயிலுக்கு சொந்தமானது என்று வாதிட்டனர்
இந்த வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய தொல்லியல் துறையிடம் இது தொடர்பாக மனு அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் 3வது நீதிபதி விஜயகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?.ஆடு, கோழி பலியிடுவதற்கு, கந்தூரி நடத்துவதற்கு அனுமதி உண்டா. நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி இருக்கிறதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மலையில் ஆடு, கோழி பலியிடுவதால் புனிதம் கெட்டு, தீட்டுப்படும்" என மனுதாரர்கள் தரப்பு வாதம் செய்தனர். நீதிபதியின் கேள்விகளுக்கு வருவாய் ஆவணங்களுடன் அரசு தரப்பில் ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது. தீட்டு என்பதே மனித குலத்திற்கு எதிரானது. மனிதர்களுக்குள் அது இருக்கவே கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு.
அழகர் கோயிலில் பதினெட்டாம்படி கருப்புக்கு கிடா வெட்டிய பிறகுதான் பெருமாளை பக்தர்கள் தரிசிக்கின்றனர். அப்படி இருக்கையில் இது எப்படி தீட்டாகும்?” என தமிழ்நாடு அரசுத் தரப்பு வாதம் செய்தது. ஒன்றிய தொல்லியல்துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கை ஆகஸ்ட்.13க்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.