Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்களை பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.

உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாகவும், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகவும் ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், உயர் நீதிமன்ற தடை உத்தரவு உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 20ம் தேதி நோட்டீஸ் அனுப்பி அக்டோபர் எட்டாம் தேதி வழக்கின் இறுதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் பிரதீப் குமார் உபாத்தியாயா மற்றும் நிர்வாக பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு விசாரணையை தீபாவளிக்கு பிறகு தள்ளி வைத்தனர்.