Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சம்பா பருவத்திற்கு தேவையான உரம் இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

சென்னை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ”தமிழ்நாட்டில் சம்பா பருவத்திற்கு தேவையான உரம் இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வது” குறித்து வேளாண்மைத்துறை மாவட்ட அலுவலர்கள் மற்றும் உர உற்பத்தி நிறுவனங்களுடன் நேற்று (13.10.202) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வேளாண்மை-உழவர் நலத்துறையின் சீரிய திட்டங்களால் நடப்பு ஆண்டில் மொத்தம் 55 இலட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கார்/குறுவை/சொர்ணவாரி பருவத்தில்

12 இலட்சத்து 33 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடைப்பணிகள் நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதலும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகாலமாக இல்லாத அளவிற்கு நெல் விளைச்சல் அமோகமாக விளைந்துள்ளது. மேலும், 33 இலட்சம் ஏக்கரில் சம்பா / தாளடி/ பிசானம் பருவங்களில் நெல்சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 10 இலட்சத்து 35 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர, நவரை, கோடை பருவங்களில் 10 இலட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த நான்கரை ஆண்டுகளில் 1.86 இலட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகள் நலன் கருதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாகுபடி பரப்பும் 3.62 இலட்சம் ஏக்கர் விரிவடைந்துள்ளது. குறித்த நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு பாசன வசதிக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக டெல்டா மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டு வந்த குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி இந்த ஆண்டு டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டது. இதற்கென இந்தாண்டு மொத்தமாக ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கும் என்றும், வட மாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பைவிட அதிகமாவும், தென்மாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பை விடக்குறைவாகவும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக உரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாரத பிரதமர் அவர்களிடம் கடிதம் வாயிலாகக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு, கூடுதலாக 12 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைப் பெற்று, தேவைப்படும் விவசாயிகளுக்கு முறையாக விநியோகம் செய்திட வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 30.09.2025 அன்று உர இருப்பு குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக இன்று சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் எவ்விதத் தடையுமின்றிக் இருப்பு வைத்து விநியோகம் செய்திட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (13.10.2025) தலைமைச்செயலகத்தில், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், வேளாண்மைத்துறை மாவட்ட அலுவலர்கள் மற்றும் உர உற்பத்தி நிறுவனங்களுடன் விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாதாந்திர உர ஒதுக்கீட்டின்படி உர உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களையும் எவ்வித குறைவும் இன்றி விநியோகம் செய்திட வேண்டும் என்றும், சில்லரை விற்பனை நிலையங்களில் மானிய விலையில் உரங்களை விநியோகம் செய்யும்போது எவ்வித இணை இடுபொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது எனவும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் நடப்பு சம்பா (இராபி) பருவத்தில் அதிக உரத் தேவையுள்ள மாதங்களான அக்டோபர்,

நவம்பர் மாதத்திற்கு தேவையான இருப்பை முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும் என்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TANFED), தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் (TCMF) ஆகிய நிறுவனங்கள், கூட்டுறவு விற்பனை நிலையங்களில், சம்பா பருவ தேவைக்கேற்ப போதுமான உரங்களை இருப்பு வைக்கவும், விற்பனை முனையக் கருவி இருப்பு (PoS இருப்பு) மற்றும் உண்மை இருப்பினை நிகர் செய்திட ஆய்வுக்குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் என்றும், இரயில் முனையங்களுக்கு வரும் உரங்களை கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு நகர்வு செய்திட பிரதிநிதிகளை நியமித்து தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), தங்களது மாவட்டங்களில் உர இருப்பு மற்றும் விநியோகம் தொடர்பாக தினசரி சில்லரை உர விற்பனை நிலையங்கள் வாரியாக உர இருப்பை கண்காணிக்க வேண்டும் என்றும், போதுமான உரங்களை தேவைக்கேற்ப உடனடியாக இருப்பு வைக்கவும், இருப்பு ஏதும் இல்லாத கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு உடனடியக இருப்பு வைத்திட தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப மட்டும் இரசாயன உரங்களை பயன்படுத்தவும், இரசாயன உரங்களின் பயன்பாட்டினைக் குறைத்து இதர உரங்களான பசுந்தாள் உரம், உயிரி உரம், மற்றும் உயிர்ம உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மாவட்டங்களில் விவசாயிகள் பயிர் சாகுபடியில் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைக் கண்டறிந்து களைய வேண்டும் என்றும், உரத்தட்டுபாட்டினை போக்கிட அடுத்த இருவாரங்களுக்கு தேவைப்படும் உரங்களை காலம் தாழ்த்தாது இருப்பு வைத்து விநியோகம் செய்வதை கண்காணிக்க வேண்டும் என்றும், தற்போது நிலவும் சாதகமான சூழ்நிலையால் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அதற்கேற்றவாறு தேவையான உரங்கள், விதைகள் உள்ளிட்ட இடுபொருட்கள் அளவினை முன்கூட்டியே மதிப்பீடு செய்து உரிய தேவைப்பட்டியலை அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாலும், வடகிழக்கு பருவ மழையை விரைவில் எதிர்பார்க்கப்படுவதாலும், சாகுபடி பணிகள், பயிர் மேலாண்மை முறைகள் குறித்து வேளாண்மை இயக்குநரிடமிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் உரிய அறிவுரைகள் (Advisory) வழங்கிட வேண்டும் என்றும், பகுதிசார்ந்த, பயிர்சார்ந்த உர மேலாண்மை, பூச்சி நோய் மேலாண்மை, உள்ளிட்டவை குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு தெரிவித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில் உள்ள 14,383 மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள், உரக்கிடங்குகள், உர உற்பத்தி நிறுவனங்களில் வேளாண்மைத்துறையால் அமைக்கப்பட்ட சிறப்புக் கண்காணிப்புக் குழுக்களால் (Special Inspection Squads) திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன்படி 1,409 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நுஓனு ஒருசில மாவட்டங்களில் தண்டுத்துளைப்பான், புகையான், இலைச்சுருட்டுப்புழு மற்றும் பாசி வளர்ச்சியால் சம்பா நெற்பயிர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள், வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களைக் கொண்ட குழு அமைத்து வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய பரிந்துரைகள் வழங்கப்பட்டதுடன், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டங்களில் தினந்தோறும் விவசாயிகளுக்கு ஏற்படும் வேளாண் தொடர்பான பிரச்சினைகள், பூச்சி / உரம் இருப்பு மற்றும் இதர பிரச்சனைகளை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இயக்குநனரகத்தில் ஒரு சிறப்பு கண்காணிப்பு பிரிவினை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், வ.தட்சிணாமூர்த்தி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர், த.ஆபிரகாம், வேளாண்மைத்துறை இயக்குநர் பா.முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், மேலாளர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், மேலாளர், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்கள், மாவட்ட அலுவலர்கள் மற்றும் உர உற்பத்தி/இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.