Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘உன் உயிர் என் கையில் தான்’ பெண் போலீசுக்கு எஸ்ஐ கொலை மிரட்டல்: ஆடியோ வைரல்; இருவரும் சஸ்பெண்ட்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் எஸ்ஐயாக இருந்தவர் செல்வகுமார் (36). அதே பிரிவில் இந்திராகாந்தி (32) என்பவர் காவலராக இருந்தார். இருவரும் நெருங்கி பழகிய நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி நடுரோட்டில் வைத்து சண்டையிட்டுக் கொண்டனர். இப்பிரச்னை வெளியே தெரிந்ததால் எஸ்ஐ செல்வகுமார் திருச்செந்தூருக்கும், காவலர் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, இந்திராகாந்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு செல்வகுமார் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் எஸ்ஐ செல்வகுமார், ‘நீ என் வேலையை எல்லாம் கெடுத்து விட்டாய், உன் பிள்ளைகளை நீ பத்திரமாய் பார்த்துக்கொள். எனக்கு எப்போது வேண்டுமானாலும் கிறுக்கு பிடித்து விடும். நேற்றிரவே உன்னை முடித்திருப்பேன். நூலிழையில் தப்பி விட்டாய்.

உச்சக்கட்ட கொலை வெறியில் இருந்தேன். நேற்றே உன்னை முடித்திருப்பேன். இன்றைக்கு உன்னை அடக்கம் செய்து இருப்பார்கள். என்றைக்கு இருந்தாலும் உன் உயிர் என் கையில் தான்’ என்றார். அதற்கு பதிலளித்து பெண் காவலர் இந்திராகாந்தி, ‘உன் பேமிலி தூத்துக்குடியில் தான் உள்ளது. கோவில்பட்டிக்கும் திருச்செந்தூருக்கும் எவ்வளவு தூரம். உனக்கு மட்டும் தான் பனிஸ்மென்ட் கிடைத்திருக்கிறதா, எனக்கும் தான். நான் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறேன்’ என்றார்.

அதன்பிறகு இருவரும் ஒருவரையொருவர் வசைமாறி பொழிந்து விட்டு செல்போனை வைத்து விடுகின்றனர். இந்த ஆடியோ வைரலானதையடுத்து, கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் இந்திராகாந்தி புகார் அளித்தார். அதன்படி எஸ்ஐ மீது 4 பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, போக்குவரத்து எஸ்ஐ செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டுள்ளார். இதேபோல, காவல்துறை நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக பெண் காவலர் இந்திராகாந்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.