ஊட்டி: குன்னூர் அருகே காட்டேரி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள முட்டிநாடு நீரோடையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல் குடிநீருக்காகவும் பல்வேறு பகுதிகளிலும் அணைகள் கட்டப்பட்டுள்ளன. அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீருக்காக கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் காட்டேரி அணை கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து நாள்தோறும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இந்த நீரேற்று மையத்திற்கு தேவையான மின் உற்பத்தி செய்யும் சிறிய மின் நிலையமும் இங்கு உள்ளது.
இந்த அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக முட்டிநாடு நீரோடை மற்றும் பாலாடை நீரோடை ஆகியவை உள்ளன. ஆனால், தற்போது முட்டிநாடு பகுதியிலிருந்து செல்லும் நீரோடை, முறையாக தூர்வாரப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. அங்கு தண்ணீர் தேங்கி நிற்பதாலும், அதிக கன மழை பெய்யும் போது தண்ணீர் வேகமாக செல்லும்போது மழை காய்கறிகள் அடித்துச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. எனவே காட்டேரி அணையில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள முட்டிநாடு நீரோடையை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும். மேலும் விவசாய நிலங்களில் இருந்து வரும் மண் நீரோடையில் விழாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.