Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சங்கரன்கோவில் அருகே பயங்கரம்; கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி வெட்டிக்கொலை: 2 பேர் கைது ; இருவருக்கு வலை

நெல்லை: சங்கரன்கோவில் அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலாங்குளம் பெரியசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம் (44). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் சிஎஸ்ஐ சர்ச் பக்கமுள்ள தோட்டம் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஆபிரகாமை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர். இதுகுறித்து சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சின்னகோவிலான்குளம் அருகே ஊத்தங்குளத்தைச் சேர்ந்த தினேஷ் (32), அவரது நண்பர் கீழக்கலங்கலைச் சேர்ந்த சிவசக்தி (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆபிரகாமிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இதனையறிந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணையும், ஆபிரகாமையும் கண்டித்தனர். எனினும் அவர்கள் இருவரும் பழக்கத்தை கைவிடவில்லையாம். இதனால் பெண்ணின் கணவர், உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து திட்டமிட்டு ஆபிரகாமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட தினேஷின் மைத்துனர் அய்யாத்துரை உட்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே ஆபிரகாம் உடல் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கொலை காரணமாக சங்கரன்கோவில் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பதற்றத்தை தணிக்க தென்காசி எஸ்பி அரவிந்த் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.