தமிழகத்தில் நெல், சோளத்துக்கு அடுத்தபடியாக அதிகளவில் பயிரிடப்படும் உணவுதானியப் பயிர் கம்பு. நீர்வளம் மற்றும் மண்வளம் குறைந்த இடங்களிலும் செழித்து வளரக் கூடிய கம்பு, மனிதர்களுக்கான சத்து மிக்க தானியமாக பயன்படுவதோடு, கால்நடைகளுக்கான சிறந்த தீவனமாகவும் பயன்படுகிறது. அரிசியை மட்டுமே உண்பதால் ஏற்படும் சத்துக் குறைபாட்டைப் போக்க கம்பு மிகச்சிறந்த மாற்று தானியம். சந்தையில் அதிக வரவேற்பு கொண்ட இந்தக் கம்பினை விவசாயிகள் பயிரிடுவதால் அதிக லாபம் பெறலாம். இதை விதைப்பண்ணை அமைத்து பயிரிட்டும் நல்ல லாபம் பார்க்கலாம். விதைப்பண்ணை மூலம் விதைகளை உற்பத்தி செய்யும் பட்சத்தில், வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை (டான்சீடா) மூலம் ஒரு கிலோ ஆதார நிலை விதை ரூ.45, சான்று நிலை விதை ரூ.50 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். இவ்வளவும் சந்தை வாய்ப்பு மிகுந்த கம்பு தானியத்தை பயிரிட்டு, பராமரிக்கும் முறை குறித்து விளக்குகிறார்கள் கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு ஊட்டசத்து இயக்கத்தின் தொழில் நுட்ப உதவியாளர்கள் சூர்ய பிரகாஷ், பிரியா ஆகியோர்.
ரகம் மற்றும் பருவம்
வீரிய ஒட்டு ரகங்களான தன்சக்தி, கோ-9, கோ-10 போன்ற ரகங்கள் கம்பு பயிர் சாகுபடிமுறைக்கு பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த ரகங்கள் மானாவாரியில் ஆடிப்பட்டம் மற்றும் புரட்டாசி பட்டத்திலும் இறைவையில் மாசிப் பட்டம், சித்திரைப் பட்டங்களிலும் பயிரிடலாம்.
விதை அளவு
ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைப்பு முறையைப் பொறுத்து விதை அளவு மாறுபடும்.
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்சில் 6 கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக விதைநேர்த்தி செய்ய வேண்டும். அல்லது விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ்பைரில்லம் கலந்து பின்பு விதைக்க வேண்டும்.
பயிர் இடைவெளி
விதைக்கும்போது வரிசைக்கு வரிசை 45 செ.மீட்டர் இடைவெளியும், செடிக்குசெடி 15 செ.மீட்டர் இடைவெளியும் விட வேண்டும்.
உர அளவு
ஒரு எக்டருக்கு தொழுஉரம் 12.5 டன், தழைச்சத்து 70 கிலோ, மணிச்சத்து 20 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும். கம்பின் நுண்ணூட்ட சத்து குறைபாட்டைத் தடுக்க தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை வழங்கும் சிறுதானிய நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோவை 40 கிலோ மண்ணுடன் கலந்து இட வேண்டும்.
களை நிர்வாகம்
கம்பு விதைத்த 15 மற்றும் 30வது நாட்களில் களையெடுக்கும் சமயத்தில் பயிருக்குப் பயிர் 15 செ.மீட்டர் இடைவெளி இருப்பது போல் களை எடுக்க வேண்டும். அல்லது களைகொல்லி மூலம் கட்டுப்படுத்த விதைத்த 3ம் நாள் மற்றும் 25-30 நாட்களில் அட்ரசின் 250 கிராமை 500 லி நீரில் கலந்து மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது தெளிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி பாதுகாப்பு முறை
குருத்து ஈக்களை கட்டுப்படுத்த 5 சதவீதம் வேப்பங்கொட்டைச்சாறு தெளிக்க வேண்டும். கதிர் நாவாய் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க 750 கிராம் கார்பரில் 50 எஸ்பி, 5 சதவீதம் மாலத்தியான் ஆகியவற்றை பூவெடுக்கும் சமயத்தில் தூவ வேண்டும். தண்டுத்துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த விளக்குப்பொறி அல்லது இனக்கவர்ச்சிப் பொறியை நிறுவ வேண்டும். அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 500 கிராம் மெட்டாலாக்சில் அல்லது 1 கிலோ மேன்கோசெப்பை 500 லி நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தேன் ஒழுகல் நோயினைக் கட்டுப்படுத்த மெட்டாலாக்சில் அல்லது கார்பெண்டசிமை பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். துருநோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு நனையும் கந்தகம் 2.5 கிலோ அல்லது மேன்கோசெப் 1 கிலோ தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் 10 தினங்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.
அறுவடை
இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தைத் தரும். தானியங்கள் கடினமாகும். அப்போது கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். ஒரு வாரம் கழித்து தட்டையை வெட்டி நன்கு காயவைத்து பின்னர் சேமித்து வைக்க வேண்டும்.
மகசூல்
இந்த முறையில் கம்பைப் பயிரிட்டால் மானாவாரியாக 1.5-2.5 டன்னும், இறைவையாக 2.5-3.5 டன் வரையும் மகசூல் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகியும், உழவர் செயலியின் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.