இணையத்தில் பரவும் ஆபாச மார்பிங் படங்கள்; என் மகனின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது: பிரபல நடிகை கண்ணீர் மல்க வேண்டுகோள்
மும்பை: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் தனது படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவோர் மீது நடிகை கிரிஜா ஓக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல இந்தி மற்றும் மராத்தி நடிகை கிரிஜா ஓக் கோட்போல், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதைத் தொடர்ந்து, சிலர் அவரது புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் மூலம் நேர்மறையாக சித்தரித்தாலும், பலரும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த செயல் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக கிரிஜா ஓக் வேதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த ஆபாச படங்கள் இணையத்தில் நிரந்தரமாக இருக்கும் என்பதும், எதிர்காலத்தில் தனது 12 வயது மகன் அவற்றைப் பார்க்க நேரிடும் என்பதும் தன்னை மிகவும் கவலையடையச் செய்வதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில், ‘எனது 12 வயது மகன் தற்போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், அவன் வளர்ந்த பிறகு நிச்சயம் பயன்படுத்துவான். அப்போது, தன் தாயின் இந்த ஆபாசமான படங்களை அவன் பார்க்கும்போது அவனது மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்தால் எனக்கு பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது. மலிவான சுகத்திற்காக இதுபோன்ற படங்களை உருவாக்கிப் பார்ப்பவர்கள், அதன் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை. இதுபோன்ற படங்களை உருவாக்குபவர்கள் மட்டுமல்ல, அதைப் பார்ப்பவர்களும் இந்தச் சிக்கலுக்கு ஒரு காரணம் என்பதை உணர வேண்டும். இணையத்தில் இதைக் கட்டுப்படுத்த எந்த விதிகளும், பொறுப்புணர்வும் இல்லாதது மிகுந்த விரக்தியை அளிக்கிறது’ என்று கவலை தெரிவித்துள்ளார்.


