மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானதாக பரவிய வதந்திகளுக்கு அவரது குடும்பத்தினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். பழம்பெரும் பாலிவுட் நடிகரான தர்மேந்திரா (89), திடீர் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவதாகவும், சிலர் அவர் காலமானதாகவும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வேகமாகப் பரவின. இந்த வதந்திகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து பரவும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினரும், அவர் மகன் சன்னி தியோல் தரப்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சன்னி தியோலின் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து பரவும் தவறான வதந்திகளில் ஈடுபட வேண்டாம். அவரது உடல்நிலை சீராக உள்ளது.அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். இந்த நேரத்தில் எங்களது குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவரது மனைவியான பாஜக எம்பியும், நடிகையுமான ஹேமமாலினி, மகன் சன்னி தியோல் மற்றும் பேரன்கள் உடன் உள்ளனர். மேலும், நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
