சென்னை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) துணை இயக்குநர் பிரசாந்த் காரத், அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: ஏஐசிடிஇ மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சகம் சார்பில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிநியமன கடிதங்கள், அதுதொடர்பான தகவல் தொடர்புகளில் மோசடிகள் நடைபெறுவதாக புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த வகையான மோசடிகள் போலி மின்னஞ்சல் முகவரி, ஆவணங்கள், ஆள்மாறாட்டம் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் நபர்கள் பணத்தை இழக்க நேரிடுகிறது. எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இந்த மோசடி விளம்பரங்கள் குறித்து அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல், ஏஐசிடிஇயின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து மின்னஞ்சல் பெறப்பட்டால் மட்டுமே கல்வி நிறுவனங்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும். அதைவிடுத்து பிற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இதுபோன்ற போலி விளம்பரங்கள் செய்வது தெரியவந்தால் அதுகுறித்து சைபர் குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.