நியாயமான கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்ததால் எஸ்ஐஆர் புறக்கணிப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவிப்பு
சென்னை: நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளதால் எஸ்ஐஆர் புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பி.முருகையன், சி.குமார், அ.பூபதி, அண்ணா.குபேரன், எஸ்.ரவி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் வழங்கப்பட்ட அதிகமான பணி அழுத்தங்களை களைந்திடவும், உரிய கால அவகாசம் வழங்கிடவும் வலியுறுத்தி கடந்த 18ம் தேதி முதல் எஸ்ஐஆர் பணிகள் முழுமையாக புறக்கணிப்பு செய்யப்பட்டது.
இதையடுத்து வருவாய்த்துறை செயலாளர் அமுதா, வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார் ஆகியோர் மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதி அளித்தனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழகத்திற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் ஆகியோர் தற்போது தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் முகாம் பணியில் உள்ளதாகவும், இன்று சென்னை திரும்பியதும் இதுகுறித்து பேசி ஆணைகள் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். எனவே போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டனர்.
இதன் அடிப்படையில் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் ஆலோசனைக்கு பின், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


