சென்னை: மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை தற்காலிக நீக்கம் செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுகவில் உட்கட்சி பூசல் எழுந்துள்ள நிலையில், துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது.
இதன் எதிரொலியாக, சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.
துரோகி என்று கூறிய வைகோவுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 2ம்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, கருப்பு சட்டை அணிந்தும், யார் துரோகி என்று எழுதிய அடையாள அட்டையுடன் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அப்போது வைகோ, ‘கட்சியை தனது மகனுக்கு வழங்குவதற்காக தன்னை துரோகியாக சித்தரிப்பதாகவும், குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ இப்போது அதையே செய்கிறார்’ என்றும் குற்றம்சாட்டினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும் ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக் கோரி 15 நாட்களுக்குள் மல்லை சத்யா எழுத்துப்பூர்மான விளக்கம் அளிக்கலாம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் சட்ட திட்டங்களை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருவதால், மல்லை சி.ஏ.சத்யாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்க உத்தரவிடப்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு கட்சியின் உடமைகள், ஏடுகள், பொறுப்புகள், கணக்குகள் அனைத்தையும் கட்சியின் பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்படுகிறது.
அவரது கருத்துக்கோ, செயல்பாட்டுக்கோ மதிமுக பொறுப்பேற்காது. அவர் மதிமுக கட்சி பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக் கூடாது. மதிமுக தலைமை நிர்வாகிகள் குறித்து கருத்து பதிவு செய்யக் கூடாது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மல்லை சத்யா கூறுகையில், ‘‘வைகோ சார்பில், 15 நாட்களில் நான் விளக்கம் அளிக்க வேண்டும் என, எனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. நான் உடனடியாக நேரில் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். நாள், நேரத்தை வைகோ தான் அறிவிக்க வேண்டும்’’ என்று கூறினார்.